(இராஜதுரை ஹஷான்)
பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களுக்கும் சேவை காலத்தை நீட்டித்து அவர்களை மகிழ்வித்து நீதித்துறையின் பிரதான கட்டமைப்பை கட்டுப்பாட்டுக்குள் வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது. நீதித்துறையை கட்டுப்படுத்தவோ அல்லது ஆக்கிரமிக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. நீதித்துறையின் சுயாதீனத்தை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டோம் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் வியாழக்கிழமை (16) நடைபெற்ற அமர்வின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தில் பொலிஸ் திணைக்களம், குற்றப்புலனாய்வுத் திணைக்களம், இலஞ்ச ஊழல் திணைக்களம் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் மேடை பேச்சாளர்கள் இந்த அரச நிறுவனங்களின் உயர்பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்கள்.
சட்ட மாஅதிபர் திணைக்களத்தை அரசியல்மயப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. சுயாதீன அரச நிறுவனங்களை கையகப்படுத்தி அதனூடாக அரச நிர்வாக கட்டமைப்பை தமக்கு ஏற்றாற்போல் செயற்படுத்த முனைவது முறையற்றது. அரசாங்கத்தை கைப்பற்றிவிட்டோம். ஆனால், அரச அதிகாரத்தை இன்னும் கைப்பற்றவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குறிப்பிடுவது இதன் வெளிப்பாடாகும்.
பிரதம நீதியரசர் உட்பட நீதியரசர்களுக்கும் சேவைக் காலத்தை நீட்டித்து அவர்களை மகிழ்வித்து நீதித்துறையின் பிரதான கட்டமைப்பை கட்டுப்பாட்டுக்குள் வைக்க அரசாங்கம் முயற்சிக்கிறது.
நீதித்துறையை கட்டுப்படுத்தவோ அல்லது ஆக்கிரமிக்கவோ நாங்கள் முயற்சிக்கவில்லை. நீதித்துறையின் சுயாதீனத்தை முன்னிலைப்படுத்திச் செயற்பட்டோம்.
நீதித்துறையின் சுதந்திரம் மற்றும் சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுகிறோம். இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. ஆகவே இந்த நடவடிக்கைகளில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி எம்முடன் ஒன்றிணைய வேண்டும்.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் மீதான மக்கள் நம்பிக்கை வளர்ச்சி பெற்றுள்ளதாக அறிக்கை வெளியாகியுள்ளது. எவ்வாறான கருதுகோளுக்கு அமைய இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இவ்வாறான அறிக்கை மீது நம்பிக்கை கிடையாது.
அரசாங்கத்தின் மீதான மக்கள் நம்பிக்கையை அறிவதற்கு அரச சார்பற்ற தொண்டு நிறுவனங்கள் அறிக்கை வெளியிடத் தேவையில்லை. மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் நடத்தினால் மக்கள் சிறந்த பெறுபேற்றை வெளிப்படுத்துவார்கள். அப்போது ஜனாதிபதி மீதான மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையின் தரத்தை விளங்கிக்கொள்ளலாம் என்றார்.
