(இராஜதுரை ஹஷான்)
எதிர்க்கட்சித் தலைவருடன் ஒன்றிணைவது இனி எவ்வித பயனுமில்லை என்பதை முன்கூட்டியதாக உணர்ந்தே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் - முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்துள்ளன. இது சிறந்ததே. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைவு வரவேற்கத்தக்கது என விவசாயம், கால்நடை மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த தெரிவித்தார்.
கண்டியில் இன்று (16) நடைபெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்துள்ளோம். மானிய விலைக்கே உரம் தற்போது விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. ஒவ்வொரு வாரமும் ஏதாவதொரு விடயத்தை எதிர்க்கட்சித் தலைவர் கையில் எடுக்கிறார். ஒருசில பிரச்சினைகளின் பின்னணியில் அரசியல் காரணிகள் இருப்பதை அவதானிக்க முடிகிறது.
விவசாயிகளின் உரிமை பற்றி தற்போது பேசும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் எவ்வாறு செயற்பட்டார். விவசாயிகளுக்கு எவ்வாறு வீடுகளை நிர்மாணித்து கொடுத்தார் என்பதை நாட்டு மக்கள் நன்கு அறிவார்கள்.
விவசாயிகளின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக்கொடுத்துள்ளோம். நெல் கொள்வனவுக்கு நியாயமான வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே இந்த விடயத்தை அரசியலாக்கும் முயற்சியை எதிர்க்கட்சியினர் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
எதிர்க்கட்சித் தலைவருடன் ஒன்றிணைவது இனி எவ்வித பயனுமில்லை என்பதை முன்கூட்டியதாக உணர்ந்தே பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் - முஸ்லிம் அரசியல் கட்சிகள் பொது இணக்கப்பாட்டுடன் ஒன்றிணைந்துள்ளன. இது சிறந்ததே. தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தமிழ் பேசும் அரசியல் கட்சிகளின் ஒன்றிணைவு வரவேற்கத்தக்கது.
எதிர்க்கட்சித் தலைவருக்கு இனி அரசியல் இல்லை, அவருடன் ஒன்றிணைந்திருந்தால் தம்மை தெரிவுசெய்த மக்களுக்கு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாது என்பதை தமிழ் மற்றும் முஸ்லிம் பிரமுகர்கள் விளங்கிக் கொண்டுள்ளார்கள் என்றார்.
