கட்டாரின் முன்னாள் மன்னர் அமீரின் மறைவுக்கு இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாகத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதற்காக அந்நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்று (16) வியாழக்கிழமை காலை நாடு திரும்பியுள்ளார்.
ஹரிணி அமரசூரிய, கட்டாரின் லுசைல் அரண்மனைக்கு விஜயம் செய்து, கட்டார் அமீர் பெருமதிப்பிற்குரிய ஷேக் தமீம் பின் ஹமாத் அல் தானியை நேரில் சந்தித்துத் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
அத்துடன், அரச குடும்பத்தின் ஏனைய உறுப்பினர்களுக்கும் இலங்கை மக்கள் சார்பாகத் தனது அனுதாபங்களைப் பகிர்ந்து கொண்டார்.
பிரதமர் தொடர்ந்து அல் வஜ்பா அரண்மனைக்கு விஜயம் செய்து கட்டார் அமீரின் தாயாரும் கட்டார் அறக்கட்டளையின் தலைவருமான ஷேக்கா மோசா பின்ட் நாசரைச் சந்தித்து இலங்கை சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
மறைந்த முன்னாள் அமீரின் மகள்களான ஷேக்கா அல் மாயாசா பின்ட் ஹமாத் அல் தானி மற்றும் ஷேக்கா ஹிந்த் பின்ட் ஹமாத் அல் தானி ஆகியோருக்கும், அரச குடும்பத்தின் ஏனைய பெண் உறுப்பினர்களுக்கும் பிரதமர் தனது அனுதாபங்களைத் தெரிவித்தார்.
இந்த இரங்கல் விஜயத்தின் போது, கட்டார் நாட்டின் சமூக மேம்பாடு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் புதைனா பின்ட் அலி அல் ஜப்ர் அல் நுஐமிக்கும் இலங்கை மக்கள் மற்றும் அரசாங்கத்தின் சார்பில் பிரதமர் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.
