(எம்.மனோசித்ரா)
நாட்டில் எழும் எந்தவொரு சாதாரணப் பிரச்சினையையும் அரசியல் இலாபத்துக்காகப் பயன்படுத்தி, ஜி. எல். பீரிஸின் இல்லத்தில் கூடி நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைத் தயாரிப்பது எதிர்க்கட்சியினரின் வாடிக்கையாகிவிட்டது என்று சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சாடியுள்ளார்.
கொழும்பில் நேற்று புதன்கிழமை (16) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் டெங்கு நோய் பரவல், சிறைச்சாலை நெருக்கடிகள், வெள்ளப் பெருக்கு போன்ற இயற்கை பேரிடர்கள் அல்லது நிலக்கரி கப்பல் வருகை தாமதமாவது போன்ற எந்தவொரு விடயம் ஊடகங்களில் செய்தியாக வந்தாலும், எதிர்க்கட்சியினர் உடனே பதறியடித்துக்கொண்டு ஜி. எல். பீரிஸின் வீட்டிற்கு ஓடுகிறார்கள். அங்கு ஒன்று கூடி கலந்துரையாடிவிட்டு, அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைத் தயாரிப்பதாகக் காட்டிக் கொள்கிறார்கள்.
ஆனால், அவ்வாறு திட்டமிட்டுத் தயாரிக்கப்படும் பிரேரணைகளில் பெரும்பாலானவை பாராளுமன்றத்திற்கு கொண்டு வரப்படுவதே இல்லை. கடந்த காலத்தில் பிரதமருக்கும் கல்வி அமைச்சருக்கும் எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டு வரப்போவதாகக் கூறி, கல்வி அமைச்சுக்கு முன்னால் உபவாசப் போராட்டங்களை நடத்தி நாடகமாடினார்கள்.
இறுதியில் அந்தப் போராட்டங்களும் கைவிடப்பட்டு, பிரேரணைகள் பற்றிய பேச்சே இல்லாமல் போனது. எனவே, இவ்வாறான வெற்றுப் பிரேரணைகளால் அரசாங்கத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றார்.
